வயலூரில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம்

வயலூரில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேரோட்டம் இன்று நடக்கிறது.

Update: 2022-06-10 21:10 GMT

சோமரசம்பேட்டை:

திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் மாலை 4 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி தேரில் எழுந்தருள செய்து, கோவில் மாடவீதிகளில் தேர் பவனி வரும். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது. 14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டம் மற்றும் விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின்பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்