கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு; மகள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகள் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-22 08:05 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராணி (வயது 65). இவர் நேற்று வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டவுடன், ராணியின் மகள் ஜானகி (38) அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

இந்த விபத்தில் மயங்கிய நிலையில் இருந்த 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், ராணி மட்டும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜானகி செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் ராணியின் உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று விட்டனர். அதே சமயத்தில் தானும், தாய் ராணியும் மின்சாரம் தாக்கி பாதிப்படைந்ததாகவும், அதில் அவர் இறந்து விட்டதாகவும் சிகிச்சையின் போது ஜானகி போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்