மின்னல் தாக்கி தொழிலாளி பலி

கயத்தாறில் நேற்று மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-28 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் நேற்று மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலிவாகனர் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 56), டல்லஸ் (56). செங்கல் சூளை தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் செங்கல் சூளை உரிமையாளர் மந்திரமூர்த்தியும் (45) வேலை பார்த்துக் கொண்டிருந்தார்

மாலையில் வெயில் குறைந்து கருமேகங்கள் சூழ்ந்தது. 5.50 மணிக்கு லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.

மின்னல் தாக்கியது

அப்போது திடீரென அவர்கள் 3 பேரையும் மின்னல் தாக்கியது. இதில் சுப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த இருவரயைும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

மேலும் சுப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சுப்பையாவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும், மகராசி, உடையம்மாள் என்ற 2 மகள்களும், மூக்கையா என்ற மகனும் உள்ளனர்.

மின்னல் தாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்