தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியவர் ஏவிஎம் சரவணன் - ரஜினிகாந்த்
ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது;
சென்னை,
ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ந்தேதி காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
ஏ.வி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏ.வி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “சினிமா மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் எனக்கு உதவியவர் ஏவிஎம் சரவணன். ஏவிஎம் சரவணன் ஒரு ஜென்டில்மேன். நான் ராகவேந்திரா திருமண மண்டபம் கட்ட ஆலோசனை வழங்கியவர் ஏவிஎம். திரைப்படங்களை எடுக்கும்போதே அனைத்துக் கோணங்களிலும் யோசிக்கக் கூடியவர் அவர். நாம் யாரை விரும்புகிறோமோ யாரை மதிக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்றுவிடுகிறது. ஏவிஎம் சரவணணின் அலுவலகத்திற்கு சென்றாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துவிடும்” என கூறினார்.