மானிய உதவியுடன் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-22 18:45 GMT

தாட்கோ

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

மானியம்

50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதமும் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

அத்துடன் 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

இதுதவிர தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு விண்ணப்பங்கள் www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்