தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வ.உ.சி. துறைமுகமானது சுண்ணாம்புக்கல், உப்பு, ராக்பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்களை கையாண்டு தற்போது சாதனை படைத்துள்ளது.;
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டான 2025-26, 14.12.2025 அன்று 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டை இதே காலநிலையிடன் ஒப்பிடுகையில் 7 நாட்களுக்கு முன்பாகவே துறைமுகம் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது. இது துறைமுகத்தின் செயல்திறன் மேம்பாட்டையும், வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் நெய்வேலி லிமிடெட் கார்ப்ரேசன் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் திறன் குறைவால் துறைமுகம் சுமார் 2.4 மில்லியன் டன் சரக்குகளை இழந்துள்ளது. இந்த நிலையிலும் துறைமுகம் இந்த சாதனை படைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.
சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரையில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு 14.12.2025 வரை 5,98,445 டியுஇ சரக்குப்பெட்டகங்களை கையாண்டு, கடந்த நிதியாண்டு இதே நாளில் கையாண்ட அளவான 5,51,186 டியுஇ சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு 8.57 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முக்கியமாக சுண்ணாம்புக் கல், உப்பு, ராக் பாஸ்பேட், கந்தக அமிலம், சமையல் எண்ணெய், திரவ அம்மோனியா மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை கையாளப்பட்டதன் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவடையும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை காரணமாக கையாளப்படும் சரக்கின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் துறைமுகத்தின் போக்குவரத்து மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மேன்மேலும் வளரும். இந்த முக்கியமான சாதனையில் தொடர்ந்து ஆதரவு மற்றும் பங்களிப்பினை அளித்த அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டக முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார்.