யூ-டியூபர் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் - போலீசார் நடவடிக்கை

யூ-டியூபர் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

Update: 2024-05-10 17:57 GMT

சென்னை,

காவல்துறை அதிகாரிகள் குறித்து, பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் போலீசாரால் இன்று சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில், மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 லட்சம் பணம், கஞ்சா அடங்கிய 4 சிகிரெட்டுகள், கார், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீடு மற்றும் திநகரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்