துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் சட்டசபை தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லைசென்சுடன் துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விடுமுறை எடுக்கவும் தடை விதி க்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-04 04:47 GMT
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன. தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தலையொட்டி எடுக்கப்படும் வழக்கமான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உரிய லைசென்ஸ் பெற்று தங்களது சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்போர், அந்த துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் உரியவர்கள் தங்களது துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2,700 பேர்

இதில் சென்னையை பொறுத்தவரை 2,700 பேர் லைசென்ஸ் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 600 பேர் தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து விட்டனர்.

மற்றவர்களிடம் இருந்தும் துப்பாக்கிகளை பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுமுறைக்கு தடை

இதற்கிடையே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின் ஒட்டு மொத்த போலீஸ் படையையும் களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தேர்தல் முடியும் வரை விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறையில் சென்றவர்களை மீண்டும் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறப்பு போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக்கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்