மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். மூன்றாவது நாளான இன்று கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்படி இன்று மாலை பிரச்சாரத்தில் இருந்த கமல் தரப்புக்கு காங்கிரசிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாகப் பிரச்சாரத்தில் பேசுவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த கமல்ஹாசன் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய தொகுதிகளை திமுக ஒதுக்காததால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் உடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.