அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே வித்தியாசமான முறையில் முதல் அமைச்சருக்கு வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, மொட்டைமாடியில் நின்று இளைஞர்கள் பலர், அரியர் பசங்க நாங்க என்ற பதாகைகளுடன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2021-03-19 04:11 GMT
சென்னை

கொரோனா தொற்று காரணமாக, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டரை தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்த மாணவர்கள், தேர்வுக்கான கட்டணம் செலுத்தியிருந்தால் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் பாஸ் செய்ய இயலாமல் கஷ்டப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இது வரப்பிரசாதமாக அமைந்தது. இதற்காக அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து, “எங்க ஓட்டு எடப்பாடியாருக்கே” என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கினார் .அப்போது அவர் வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகளைச் சேகரித்தார். நாகை நகரில் முக்கிய வீதிகளில் கடும் வெயிலில் முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கட்டடத்தில் மொட்டை மாடியில் பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. எடப்பாடி பழனிசாமி  சத்தம் வந்த திசையை நோக்கி எட்டி பார்த்தார்.

அங்கே 15 க்கும் மேற்பட்டவர்கள் பச்சை வண்ணத்தில் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். பதாகைகளில் "எடப்பாடியார்" என்று மேல் வரிசையில் நின்ற மாணவர்கள் எழுதி வைத்திருந்தனர். அடுத்த வரிசையில் நின்ற இளைஞர்கள் "அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே" என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர். இதை பார்த்து மனம் நெகிழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி வாய் விட்டு சிரித்தார். அரியர் அச்சத்தில் இருந்த மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வருக்கு இளைஞர்கள் இப்படி வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்