விஜயகாந்துக்கு கொடுத்த வெற்றியை தனக்கும் தர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விருத்தாசலம் தொகுதியில் 2006-ல் விஜயகாந்துக்கு கொடுத்த வெற்றியை தனக்கும் தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Update: 2021-03-24 09:58 GMT
விருத்தாசலம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி  நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  

இதற்கிடையில், அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அதே தொகுதியில் தற்போது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதற்காக அவர் விருத்தாசலம் தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விருத்தாசலம் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், விருத்தாலசம் தொகுதியில் 2006-ல் விஜயகாந்துக்கு கொடுத்த வெற்றியை தனக்கும் தரவேண்டும்’ என்றார்.

முன்னதாக, தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்