ரூ.2 லட்சம் பறிமுதல்
தேனி மாவட்டத்தில் பறக்கும்படை வாகன தணிக்கையில் ரூ2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வேனில் வந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வத்தியிருப்பு பகுதியை சேர்ந்த சுனில் என்பவரிடம் ரூ.81 ஆயிரம் இருந்தது.
அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதுபோல் ஆண்டிப்பட்டியில் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன தணிக்கையில், இடுக்கி மாவட்டம் உப்புத்துறையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சரக்கு வேனில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.51 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம் பங்களாபட்டியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையின் போது, திருச்சியை சேர்ந்த சையது சம்சுதீன் சரக்கு வேனில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த ரூ.73 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.