அ.தி.மு.க. கூட்டணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை பற்றி பேசிய போது கண்கலங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க. கூட்டணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை பற்றி பேசிய போது கண்கலங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

Update: 2021-03-30 20:19 GMT
சிவகாசி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

கடந்த 15 நாட்களாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பம்பரமாக செயல்படுகிறீர்கள். கட்சிக்காக தன்னுடைய உடல் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா பணியாற்றினார். அவரின் எண்ணம் எல்லா தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். (இவ்வாறு பேசிய போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண் கலங்கினார். பின்னர் சிறிது நேரம் மவுனமாக இருந்து விட்டு பேச தொடங்கினார்).

அடிமட்ட தொண்டனுக்கும் பதவி வழங்கி அழகு பார்ப்பது அ.தி.மு.க. மட்டும் தான். ஏழை மக்களுக்கு உதவுவதில் ஜெயலலிதா தான் முதன்மையானவர். தற்போது நம்மிடம் ஜெயலலிதா இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். அவர் நம் எல்லோருடைய இதயத்திலும் வாழ்ந்து வருகிறார். அவர் கண்ட கனவு மெய்ப்பெற வேண்டும். இன்னும் 100 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்