பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரசாரம்
பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார். தொடர்ந்து புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்.
கோவை
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் மயூரா எஸ்.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் ஆகியோர் இத்தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர்.
வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, வாக்குச் சேகரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார்.
நண்பகல் 12 மணிக்குக் கோவை விமான நிலையத்துக்கு வந்த அவரைக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, புலியகுளத்துக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார். அப்போது வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.
அதைத் தொடர்ந்து புலியகுளத்தில் கட்சி நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கிருந்து ஊர்வலமாகப் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் தேர்முட்டிப் பகுதிக்கு வந்தார். அங்கு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.