கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு

கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Update: 2021-05-02 07:51 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. பாஜக தனித்து போட்டியிட்டது.

கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி, 89 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே இந்த முன்னிலை நிலவரம் காட்டுகிறது.

மேலும் செய்திகள்