கேரளாவில் முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்; அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதி

கேரளாவில் வாரஇறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-08-01 03:55 GMT



திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 லட்சத்திற்கும் மேல் சென்றுள்ளது.  இதேபோன்று மொத்த பலி எண்ணிக்கையும் 16 ஆயிரத்திற்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை.  இதனை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, வாரஇறுதி நாட்களான நேற்றும், இன்றும் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு, கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு பயணம் மேற்கொள்கிறது.  இதன்படி, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம் என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.

கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  அதனால், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்றும் அவர் கூறினார்.  இதன்படி, கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று முன்தினம் இரவு கேரளா வந்தடைந்தது.

இந்த நிலையில், கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.  இந்த நாட்களில் மக்கள் அவசியமின்றி வெளியே வர தடை விதிக்கப்படுவதுடன், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காய்கறி, பழங்கள் மற்றும் மீன்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  கேரளாவில் வாரஇறுதி நாளில் ஊரடங்கானது இன்று 2வது நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு கேரளாவின் பல பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  மக்கள் வெளியே வருவது குறைந்திருந்தது.  ஒரு சில வாகனங்களே சென்றன.  எனினும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  அவற்றை விற்க கூடிய கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்