சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு, சர்வதேச அளவில் கிடைத்த முதல் அங்கீகாரம்

கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க 100 தமிழக மீனவர்களை அனுமதித்திருப்பது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா எழுதிய கடிதம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், அதன் நகல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும்

Update: 2016-12-17 08:32 GMT
கச்சத்தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க 100 தமிழக மீனவர்களை அனுமதித்திருப்பது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா எழுதிய கடிதம், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், அதன் நகல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

எந்த வகையில், இலங்கை அரசிடம் இருந்து சசிகலாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

அதாவது, ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, இரங்கல் தெரிவிக்க இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், டிசம்பர் 7ம் தேதி சென்னை வந்தார். அப்போது, சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிய ஆறுமுகம் தொண்டமானிடம், கச்சத் தீவு தேவாலயத் திறப்பு விழாவில், குறைந்தது 100 தமிழக மீனவர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும், தனது கோரிக்கையை இலங்கை அதிபரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டார்.

சசிகலாவின் கோரிக்கையை, ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அதிபரிடம் எடுத்துரைத்து, 100 தமிழக மீனவர்களுக்கு அனுமதியும் பெற்றுள்ளார்.

எனவே, இது தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவருக்கும் சசிகலாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம், தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது. அதில், பெறுநர் முகவரியில், திருமதி சசிகலா, போயஸ் கார்டன், சென்னை - 68 என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்த கடிதமே, சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு, சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்