டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீனா கைவிடுமா?

டோக்லாம் பகுதியில் சாலை பணியை கைவிடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Update: 2017-08-30 03:47 GMT

பீஜிங், 


இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்து வந்ததால், இந்திய ராணுவம் தலையிட்டு அப்பணியை நிறுத்தச் செய்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 2 மாதங்களாக போர் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்படுவதாக இரு நாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. 

ஆனால், அந்த அறிவிப்பில், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்படுமா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வானிலை, கள நிலவரம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சாலை பணியை நிறைவு செய்வோம்’ என்றார். இதன்மூலம், சாலை பணியை கைவிடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பான டோக்லாமில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன, இப்போது சீனாவின் அறிவிப்பானது மோதலை நிறுத்திக் கொள்ளும் எண்ணம் அதனிடம் இல்லை எனவும் தெரிகிறது. ஏற்கனவே எல்லையில் டோக்லாம் போன்ற சம்பவங்களானது வருங்காலங்களில் அதிகரிக்கக்கூடும் என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்