பிரான்ஸ் கிராமங்களில் ஓநாய் பீதி!

பிரான்ஸ் கிராமப்புறத்தில் ஓநாய்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல ஆடுகள் பலியாகியிருப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2018-07-07 07:23 GMT
பிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் அவேரான் மாகாணத்தில்தான் ஆடுகளை ஓநாய்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனவாம்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜான் பால் ஸ்குவட்டர் என்ற விவசாயி கூறும்போது, ‘‘தினந்தோறும் நான் காலையில் என்னுடைய ஆட்டுமந்தையில் பார்க்கும் போது சில ஆடுகள் ஓநாயின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். என்னையும்கூட சில நேரங்களில் ஓநாய்கள் தாக்கியுள்ளன. நான் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் குழந்தைகள் ஓநாய்களிடம் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று சொல்கிறார்.

தான் அறிந்தவரையில், தாக்குதல் நடத்தும் ஓநாய்க் கூட்டத்தில் குறைந்தது 10 ஓநாய்களாவது இருக்கும், ஆனால் இதுகுறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை எனவும் ஜான் பால் கூறுகிறார்.

பிரான்சின் அவேரான் மாகாணத்தில் கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான ஆடுகளை ஓநாய்கள் தாக்கியுள்ளன.

உள்ளூர் மேயர் ஒருவர் சமீபத்தில்கூட 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் குறிப்பிட்ட பகுதி வழியே செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தார்.

தங்கள் ஆடுகளை ஓநாய்களிடம் இருந்து காப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப்புற மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்