ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள்: இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை

ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள் என்று இலங்கை மக்களுக்கு விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-11-09 07:28 GMT
கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார்.

இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்கிறது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நாடாளுமன்றத்தை 16–ந் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.இப்போது நாடாளுமன்றம் 14–ந் தேதி கூடும் என அவர் அறிவித்தார். 

இலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று,  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக, கொழும்பு நகரில் வியாழக்கிழமை வாகனப் பேரணி நடைபெற்றது.இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ரணிலின் ஆதரவாளர்கள், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தனக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிய போராடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரனில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்திற்காக போராடுவதை கைவிட்டு விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்