ஆஸ்திரேலியா: மெல்போர்ன் தாக்குதலில் ஈடுபட்டவரின் அடையாளம் தெரிந்தது

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது.

Update: 2018-11-10 04:52 GMT
மெல்போர்ன், 

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (உள்ளூர் நேரப்படி)  மாலை சுமார் 4.30 மணியளவில் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தனர்.  அப்போது அங்குவந்த ஒருவர் காருக்கு தீவைத்ததோடு, கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். 

இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.  காயம் அடைந்த 3 பேரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த போலீசாரையும் அவர் கத்தியால் குத்த முயன்றதால்  கார் டிரைவர் என கருதப்படும் அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் பிறகு உயிரிழந்தார். பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்துள்ளது. சோமாலிய நாட்டைச்சேர்ந்த  அந்த நபரின் பெயர், ஹசன் காலிஃப் ஷைர் அலி என்று தெரியவந்துள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் , காலிஃப் ஷைர் அலி ஈர்க்கப்பட்டு இருந்ததாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்திகளில் வெளியாகியுள்ளது. 

ஷைர் அலிக்கு சொந்தமான இரண்டு இடங்களில் சோதனை நடத்தும் ஆஸ்திரேலிய போலீசார், அவருடைய மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்