மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா ! உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-10 05:18 GMT
 க்யாக்பியூ, 

மியான்மர் நாட்டின் க்யாக்பியூ நகரில் துறைமுகம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான ஒப்பந்தங்கள் கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்டன. ஏற்கனவே, பாகிஸ்தானின் குவாதர் நகரில் துறைமுகத்தை சீனா கட்டமைத்து வருகிறது. 

இதேபோன்று இலங்கையின் அம்பந்தோட்டாவில் துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இவற்றை தவிர்த்து வங்காள தேசத்தின் சிட்டகாங்க நகரில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்திற்கு சீன அரசு பெருமளவில் நிதியுதவி செய்துள்ளது.

இவ்வாறாக இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில், அதிக முனைப்புடன் முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் சீனா தற்போது மியான்மரிலும் துறைமுகம் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, வங்காள தேசம் ஆகிய நாடுகளில் துறைமுகம் அமைக்கும் பணியில் சீனா மும்முரம்  காட்டி வருவது, இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் செயலாக கருதப்படுகிறது. இதனால், மியான்மரில் நடந்து வரும் சமீபத்திய முன்னேற்றங்களை இந்தியா  தீவிரமாக கவனித்து வருகிறது. 

மேலும் செய்திகள்