சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலி
சிரியாவில் நடந்த ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
அலெப்போ,
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த சிரியாவின் அலெப்போ நகரில் ரசாயனம் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் குளோரின் என்ற வேதி பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதனை வெடிகுண்டுகளில் நிரப்பி தீவிரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.
இதனால் வெடிகுண்டு தாக்குதலுடன் பொதுமக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு உயிரிழப்பினை ஏற்படுத்தியது. இதில், 9 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி அலெப்போ ஆளுநர் உசைன் தியாப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த தீவிரவாத சம்பவத்தில் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலால் தீவிரவாதிகளிடம் ரசாயன ஆயுதங்கள் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.