கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல்; 14 பேர் பலி

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் ‘டசிட் டி–2’ என்ற சொகுசு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் 101 அறைகள், உணவுவிடுதி, அலுவலக கட்டிடங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

Update: 2019-01-16 23:15 GMT

நைரோபி,

நேற்று முன்தினம் மதியம் அந்த ஓட்டல் வளாகத்திற்குள்  அல் சபாப் பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்களில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி எடுத்து வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

அதைத் தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் நாலாபுறமும் சென்று அங்கிருந்து கொண்டு ஓட்டலில் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்தவாறு ஓட்டம் பிடித்தனர். அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தகவல் அறிந்ததும் கென்யா படையினரும், அங்குள்ள பிற நாடுகளின் தூதரகங்களில் இருந்த வெளிநாட்டுப் படைகளும் சம்பவ ஓட்டலுக்கு விரைந்து சுற்றி வளைத்தன.

இருப்பினும் பயங்கரவாதிகள் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கர் ஒருவரும் அடங்குவார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த படைகளின் நீண்ட நேர தாக்குதல்களுக்கு பிறகு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 4 பேர் இந்த தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய அல் சபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

கென்யாவின் கிழக்கு பகுதியில் காரிசா நகர பல்கலைக்கழகத்தில் அல் சபாப் பயங்கரவாதிகள் 2015–ம் ஆண்டு ஏப்ரல் 2–ந் தேதி நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்