உலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர்கள் தொகையை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

Update: 2019-04-09 06:38 GMT
வாஷிங்டன்

வெளிநாடுகளில் பணிபுரிவோர் 2018ஆம் ஆண்டில் அவரவர் தாயகத்திற்கு அனுப்பிய மொத்த தொகை தொடர்பான விவரங்களை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள்தான் தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில் இந்தியா 2018ஆம் ஆண்டில் 79 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் 62.7 பில்லியன் டாலர்களாகவும், 2017ஆம் ஆண்டில் 65.3 பில்லியன் டாலர்களாகவும் இருந்த தொகை 2018ஆம் ஆண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

கனமழை-வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது, அம்மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவோர் தங்கள் குடும்பங்களுக்கு அதிக தொகை அனுப்பியதும் இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக 67 பில்லியன் டாலர்கள் தொகையை பெற்று சீனா இரண்டாமிடத்திலும், 36 பில்லியன்கள் டாலர்கள் தொகையைப் பெற்று மெக்சிகோ மூன்றாமிடத்திலும் உள்ளன.தொடர்ந்து பிலிப்பைன்ஸ் (34 பில்லியன் ) எகிப்து ( 29 பில்லியன் ) உள்ளன.

பாகிஸ்தானில், சவுதி அரேபியாவிலிருந்து வந்த மிகப்பெரிய பணப்பரிமாற்ற மூலதனத்தின் குறிப்பிடத்தக்க சரிவுகளின் காரணமாக, பணப்புழக்க வளர்ச்சி மிதமானதாக இருந்தது (ஏழு சதவீதம்).

வங்காளதேசத்தில்  பணம் அனுப்புவது 2018 ல் 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. அறிக்கையின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம் 2018 ஆம் ஆண்டில் 529 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது, இது 9.6%  உயர்வு ஆகும் 2017 ல் $ 483 பில்லியன்  பணம் அனுப்பப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்