ஒரே அறையில் 9 மணி நேரம் அமர்ந்திருந்த மோடி-இம்ரான்கான்! இருந்தும் பேசவில்லை

பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருவரும் 9 மணி நேரம் ஒரே அறையில் அமர்ந்திருந்தனர்.

Update: 2019-06-15 06:45 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக நாட்டு தலைவர்கள், உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் கூடினர். அப்போது, பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஒரே இடத்தில் இருந்தனர்.  இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதோடு, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக மோடிக்கு இம்ரான்கான் வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, கிர்கிஸ்தான் அதிபர் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். அப்போது, பரஸ்பரம் தலைவர்கள் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.

மாநாடு நடைப்பெற்ற அரங்கில் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு நடைபெற்றதை, அதிகாரிகள் வட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே நடைப்பெற்ற பேச்சு வார்த்தை குறித்த எந்த தகவலும் இல்லை.

ஷாங்காய் மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

2 நாட்களாக நடைப்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இருவரும் 9 மணி நேரம் ஒரே  அறையில் அமர்ந்திருந்தனர். இருவரும் நேருக்கும் நேருக்கு அமர்ந்திருந்தாலும் இருவருக்குமான பேச்சுவார்த்தை என்பது வெறும் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்