பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சை: பேஸ்புக் நிறுவனத்துக்கு பின்னடைவு

பயனாளர்களின் தகவல் திருட்டு சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-13 13:46 GMT
வாஷிங்டன்,

பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் பிரபல சமூக  வலைதளமான பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் கேம்ப்ரிட்ஜ் அனால்டிக்கா என்ற நிறுவனத்திற்கு தனது  பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் அளித்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நிறுவனம் கடந்த 2016-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர்  வேட்பாளராக இருந்தபோது அவர் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக வேலை செய்தது. பயனாளிகளின் தகவல்கள் கிடைத்தால் அவர்களது எண்ண  ஓட்டங்களை அறிந்து, அதற்கேற்ப பிரசாரங்களை கேம்ப்ரிட்ஜ் நிறுவனத்தால் செய்ய முடியும்.

தகவல் திருடப்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பிய நிலையில், இதற்கு பேஸ்புக் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது. இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து  அமெரிக்காவில் வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் மத்திய வர்த்தக ஆணையம்  விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், பேஸ்புக்கிற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்