வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு மோசடி: கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவிப்பு

வாட்ஸ்அப்பில் வந்த வேலைவாய்ப்பு மோசடி செய்தியால், கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவித்து வருகின்றனர்.

Update: 2019-07-21 22:15 GMT
துபாய்,

மோசடி ஏஜெண்டை நம்பி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 9 பேர், அங்கு ஏமாற்றப்பட்டு தவித்து வருகிறார்கள். அவர்கள் கேரளாவில் இருந்தபோது, “ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 நாளில் வேலை வாங்கித் தரப்படும்“ என்று வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தியை நம்பி, அதில் குறிப்பிடப்பட்ட ஷபீக் என்ற ஏஜெண்டை சந்தித்தனர்.

‘விசிட்‘ விசாவுக்கு ரூ.70 ஆயிரம் அளிக்குமாறு ஷபீக் கூறவே, நகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் அந்த பணத்தை செலுத்தினர். அல் அய்ன் நகரில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக ஷபீக் உறுதி அளித்தார்.

ஆனால், அபுதாபியில் இறங்கியவுடன், அவர்களை வேறு ஒரு ஏஜெண்ட் அணுகினார். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஜெயிலுக்கு சென்று விட்டதால், வேறு புதிய வேலை தேடித் தருவதாக அந்த ஏஜெண்ட் கூறினார்.

இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை 9 பேரும் உணர்ந்தனர். அல் அய்ன் நகரில் 5 பேரும், அஜ்மன் நகரில் 4 பேருமாக செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய தூதரகம் பண உதவி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்