அமெரிக்காவில் பயங்கரம்: 3 மகன்களுடன் இளம்பெண் சுட்டுக்கொலை - முன்னாள் கணவர் வெறிச்செயல்

அமெரிக்காவில் 3 மகன்களுடன் இளம்பெண் ஒருவர், அவரது முன்னாள் கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Update: 2019-11-17 22:35 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இளம்பெண் ஒருவர் தனது 4 மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த இளம்பெண்ணின் முன்னாள் கணவரான 31 வயது வாலிபர் அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது முன்னாள் மனைவியை சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதன் பின்னர் அவர் தன்னுடைய 4 மகன்களையும் துப்பாக்கியால் சுட்டார்.

அதனை தொடர்ந்து அந்த வாலிபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம்பெண், அவரது முன்னாள் கணவர் மற்றும் 3 மகன்கள் பரிதாபமாக இறந்தனர். 11 வயதான சிறுவன் மட்டும் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

மேலும் செய்திகள்