லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

லண்டன் பாலத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Update: 2019-12-03 12:28 GMT
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள லண்டன் பாலத்தில் கடந்த 29 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று உஸ்மான்கான் என்ற நபர் பொதுமக்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய உஸ்மான்கானை லண்டன் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர் 2012-ம் ஆண்டு, பயங்கரவாத குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று லண்டன் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நீல் பாசு குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட உஸ்மான்கான் லண்டன் ஸ்டாபோர்டுஷயர் பகுதியில் வசித்து வந்துள்ளார். லண்டனில் இருந்தபடி இணையதளம் மூலமாக இவர் பயங்கரவாதத்தை போதனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் இவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் லண்டன் பாலத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர் தான் என்று அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. எனினும் இதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்