ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியில் ரூ.7,600 கோடி குறைப்பு: அமெரிக்கா அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு வழக்கப்பட்டு வரும் நிதியுதவியில் ரூ.7,600 கோடி குறைக்கப்படுவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

Update: 2020-03-24 23:27 GMT
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த மாதம் வெளியாகின. இதில் அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட மூத்த அரசியல்வாதியான அப்துல்லா அப்துல்லா தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார்.

இந்த சூழலில் கடந்த 9-ந்தேதி தலைநகர் காபூலில் நடைபெற்ற விழாவில் அஷ்ரப் கனி புதிய அதிபராக பதவியேற்றார். அதே சமயம் அப்துல்லா அப்துல்லாவும் போட்டி பதவியேற்பு விழாவை நடத்தி அதிபராக பதிவியேற்றார்.

இதற்கிடையில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க அரசு மற்றும் தலீபான்கள் இடையே கடந்த மாத இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அங்கு தற்போது அரசியல் குழப்பம் நீடிப்பதால் இந்த அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நேற்று முன்தினம் திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மைக் பாம்பியோ அவசர பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றதால் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

மேலும் ஆப்கானிஸ்தானின் அரசியல் முட்டுக்கட்டைக்கு அவர் ஒரு தீர்வை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த வித முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடாமல் மைக் பாம்பியோ ஆப்கானிஸ்தானில் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் அமெரிக்க திரும்பிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான நிதியுதவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரத்து 600 கோடி) குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது முக்கிய அரசியல் போட்டியாளரான அப்துல்லா அப்துல்லா ஆகியோர் தலீபானுடனான அமைதிய பேச்சுவார்த்தைக்கு ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க ஒப்பு கொள்ள தவறியதாகவும், இது அமெரிக்க தேசிய நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் இதே நிலை நீடித்தால் 2021-ம் ஆண்டுக்கான நிதியுதவியில் மேலும் 1 பில்லியன் டாலர் குறைக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்