கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் - உலக சுகாதார அமைப்பு கவலை

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அடுத்த பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-05 09:06 GMT
ஜெனீவா

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்ட 48,600 பேர் உட்பட 48,62,000 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.அங்கு இதுவரை 1,58,900 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பிரேசிலில் 27 லட்சத்து 51 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 8 லட்சத்து 56 ஆயிரம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில்  பேசிய அதனோம் கூறியதாவது:-

கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.இதுவரை இல்லாத வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் ஆகும்.

இந்தத் தொற்றுநோய் ஒரு நூற்றாண்டில் ஒரு முறை வரும் சுகாதார நெருக்கடி. இதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என்றும், அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்