டொனால்டு டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை நீக்கிய டுவிட்டர்; வெடித்த சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

Update: 2020-10-06 11:31 GMT
வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென்று அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஹெலிகொப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் குழு ஊடகங்களை சந்தித்து, ஜனாதிபதி டிரம்பின் நிலை குறித்து விளக்கியது.

தற்போது காய்ச்சலில் இருந்து விடுபட்டதாக கூறிய மருத்துவர்கள், ஆனால் 48 மணி நேரத்திற்கு பின்னரே ஜனாதிபதி டிரம்பின் உண்மையான நிலை தொடர்பில் உறுதியளிக்க முடியும் என தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே, ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் காணொளி ஒன்றை வெளியிட்டு, தாம் நலமாக இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.ஆனால் அந்த காணொளியில், ஜனாதிபதி டிரம்பின் உடல் மொழியை ஆராய்ந்துள்ள நிபுணர்கள்,அவர் நம்பிக்கை இழந்தும், மிகுந்த கவலையுடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிரம்ப் உடல் நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களுக்கும் மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்களுக்கும் முரண்பாடுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்கு மத்தியில் டிரம்ப், மருத்துவமனை முன்பாக உள்ள சாலையில் காரில் பயணித்தார். 

அப்போது அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். டிரம்ப் திடீரென வெளியே வந்தது அவரது ஆதரவாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  டிரம்ப் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர் திங்கள் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடும் எனவும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

அனைத்தும் தமது கட்டுக்குள் இருப்பதாக டிரம்ப் காட்டிக்கொண்டாலும், அவருக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை என்றே அவரது பேச்சில் இருந்து வெளிப்படுவதாக உடல் மொழியை ஆராய்ந்துள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும் அந்த காணொளியில், அதிசயம் நிகழும் என ஜனாதிபதி டிரம்ப் மூன்று முறை குறிப்பிடுகிறார். இதுவே, மருத்துவர்கள் மீதான அவரது நம்பிக்கையின்மையை காட்டுவதாக கூறுகின்றனர்.

ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும், அவர் போராடுவதாகவும் கூறுகின்றனர் உடல் மொழி நிபுணர்கள்.அவரது முகம் களை இழந்து வெளிறி காணப்படுவதாகவும், அவரது தலை மேஜையுடன் குப்புற சரிந்த நிலையில் காணப்படுவது, அவர் சோர்ந்துபோயுள்ளார் என்பதை காட்டுவதாக கூறுகின்றனர்.

மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் சோகம் கலந்திருப்பதாகவும், அவர் வழக்கமாக காணப்படுவதை விட உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று விரும்புவதாக வெளியிடப்பட்ட பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று பதிவுகள் வெளியானது. 

இதனை அடுத்து, ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் அப்படி வெளியிடப்பட்ட அந்த டுவீட்களை நீக்கியது.

இதையடுத்து இந்த விதிமுறைகளை அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று பயனர்கள் டுவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்