துருக்கி நிலநடுக்கம்: 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்பு !
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இஸ்தான்புல்,
துருக்கி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்மிர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கட்டிட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு 91 மணி நேரத்தை கடந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை இஸ்மிர் நகர மேயர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,” அதிசயக்கத்தக்க வகையில் 91 மணி நேரத்திற்கு பிறகு 4-வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளாள். கடும் துயரத்திற்கும் மத்தியிலும் அனைவருக்கும் மகிழ்ச்சியை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது” என்றார்.