ரஷ்யாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 28,142 பேருக்கு தொற்று உறுதி

ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 28,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-07 17:34 GMT
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 15.4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ரஷ்யாவிலும் பாதிப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதன் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,88,912 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 456 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 43,597 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மட்டும் இன்று 7,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதே சமயம் ரஷ்யா முழுவதும் இன்று ஒரே நாளில் 18,850 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,56,588 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தற்போது 4,88,727 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்