அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழா தொடங்கியது; முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 உத்தரவுகள் கையொழுத்தாகிறது.
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொழுத்திட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.
அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர் அரங்குகள் வழியாக நடந்து விழாமேடைக்கு வந்தனர்.
துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் உட்பட பல உயர்மட்ட நபர்கள் ஊதா நிற ஆடையை அணியத் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வண்ணம் பாரம்பரியமாக அமெரிக்காவில் இரு கட்சிகளின் அடையாளமாக காணப்படுகிறது - இது ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் நீலம் மற்றும் சிவப்பு ஆகியவற்றின் கலவையாகும்.
ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையொழுத்திட உள்ளார் என என வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் ஜென் சகி கூறி உள்ளார்.
ஜென் சகி கூறியதாவது:-
குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்குப் பொருளாதார உதவி, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் உள்ளன.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. நிதியுதவியையும் நிறுத்தியது. அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைந்து நிதியுதவி வழங்கும். உலக சுகாதாரக் கூட்டத்திலும் அமெரிக்கா வருங்காலத்தில் பங்கேற்கும்.
பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தில் வெளியேறியது. அந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்படும். புதிய வேலைவாய்புகள், பருவநிலை மாற்றச் சிக்கல்களைத் தீர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை எடுக்கப்படும்.
கறுப்பினத்தவர்கள், லாட்னோ, பூர்வீக அமெரிக்கர்கள், ஆசிய அமெரிக்கர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எல்ஜிபிடி பிரிவினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோர் அனைவரையும் சமமாக நடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் அகதிகள் நுழையாத வகையில் ட்ரம்ப் ஆட்சியில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியுதவி உடனடியாக ரத்து செய்யப்படும் என ஜென் சகி கூறி உள்ளார்.