மலாலா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி "இந்த முறை எந்த தவறும் ஏற்படாது" என மீண்டும் மிரட்டல்

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு டுவிட்டரில், தலிபான் தீவிரவாதி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-19 17:02 GMT
இஸ்லாமாபாத்

பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து  வந்த மலாலா யூசுப்சாய் மீது  கடந்த 2012-ம் ஆண்டு  தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி மலாலா, லண்டனில் உயர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்றார். பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய்க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  17 வயதில் மலாலா இந்த விருதை பெற்றார். 

மலாலா மீதான் தாக்குதலுக்கு  பொறுப்பேற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் முன்னாள் செய்திதொடர்பாளர் இஷானுல்லா இஷான்  கைது செய்யப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிவிட்டார்.

இந்நிலையில் டுவிட்டரில் மலாலாவை தொடர்பு கொண்ட அவன், ”இந்த முறை எந்த தவறும் ஏற்படாது” என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மலாலா யூசுப்சாய் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி  இஷானுல்லா இஷான்  பெஷாவரில் -2014 ஆம் ஆண்டு ராணுவ பள்ளியில் நடத்திய தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவத்திலும் தொடர்புடையவன்.

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரும் இஷான்  எவ்வாறு தப்பினார் என்பதை விளக்குமாறு மலாலா கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து பிரதமரின் ஆலோசகர் ராவூப் ஹசன்  கூறும் போது மலாலா மீதான் அச்சுறுத்தல் குறித்து அரசு விசாரித்து வருகிறது, உடனடியாக  அந்த கணக்கை முடக்குமாறு டுவிட்டரிடம் கேட்டுக் கொண்டது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்