கனடா நாட்டில் பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்; 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ.

Update: 2021-03-11 18:04 GMT

 இவரது வீட்டு வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி கோரே ஹர்ரன் என்பவர் கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்தார். அப்போது வீட்டில் பிரதமரோ, குடும்பத்தினரோ இல்லை.

பின்னர் கோரே ஹர்ரன் போலீசில் சரண் அடைந்தார். பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, பிரதமரை அச்சுறுத்த முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கு, கடந்த மாதம் 7-ந் தேதி ஆன்டாரியோவில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கோரே ஹர்ரன், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவர் சமூகத்துக்கு ஆபத்தானவர் என்று அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

தான் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் அங்கு செல்லவில்லை என்று கோரே ஹர்ரன் குறிப்பிட்டார்.

இருப்பினும் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ராபர்ட் தீர்ப்பு அளித்தார்.

 

மேலும் செய்திகள்