ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலி 60 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலி 50 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-05-10 08:24 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே இ பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளி கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டு மொத்த நகரையும் அதிர வைத்தது.‌

இந்த நிலையில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்துள்ளதோடு தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்