பைசர் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டது - இஸ்ரேல் அறிக்கை

டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக பைசர் தடுப்பூசி குறைவான செயல்திறனை கொண்டிருப்பதாக இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-06 17:36 GMT
ஜெருசலேம்,

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை செலுத்த ஆர்வமாக உள்ளன.

இதற்கிடையில் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய்கிருமியானது ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்ட பிளஸ் என பல வகையான உருமாற்றங்களை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் டெல்டா வகை கொரோனா காரணமாக கொரோனா 2-வது அலையின் போது மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு முன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன், அஸ்ட்ரா செனகா, கோவேக்சின், ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 95 சதவீதத்திற்கு மேல் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பைசைர் தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் மக்களின் சதவீதம் சற்று குறைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செயல்திறன் சற்று குறைந்தாலும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் சிறந்த தடுப்பு அரணாக பைசர் இருப்பதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்