தென் ஆப்பிரிக்கா வன்முறை போராட்டம்- பலி எண்ணிக்கை 212- ஆக அதிகரிப்பு

வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 212- ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-16 23:38 GMT
ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கடந்த வாரம் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இந்த வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. வன்முறையை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 212- ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  வன்முறை நடந்த இடங்களில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவர பகுதிகளில்  தேசிய பாதுகாப்பு படையினர் சுமார் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்