மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் முகைதின் யாசின்

ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டு வெளியே வந்த முகைதின் யாசின் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார்.

Update: 2021-08-16 08:01 GMT


மலேசியாவில் கூட்டணி அரசில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக முகைதின் யாசின் பதவி ஏற்றார். இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை மன்னரின் ஒப்புதல் இல்லாமலேயே பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியது. இதனால் பிரதமர் முகைதின் யாசின் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. 

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளும் அரசு பெரும்பான்மை இழந்தால் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் முகைதின் யாசின் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி வந்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக மலேசிய பிரதமர் முகைதின் யாசின் இன்று ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டு மன்னரை  நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டு வெளியே வந்த முகைதின் யாசின் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். 

மேலும் செய்திகள்