ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் விமானம் மூலம் வெளியேறிய 28 அமெரிக்கர்கள்!

கத்தார் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 28 அமெரிக்கர்கள் வெளியேறி உள்ளனர்.

Update: 2021-09-19 21:27 GMT
வாஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலை கடந்த மாதம் 15-ந் தேதி கைப்பற்றியதின் மூலம் ஆட்சி அதிகாரம், தலீபான்களிடம் வந்து விட்டது. எப்போதும் துப்பாக்கியும், கையுமாக வலம் வந்து கொண்டிருக்கிற தலீபான்களுக்கு பயந்து, அங்கு இருந்து வந்த வெளிநாட்டினரும், உள்நாட்டு மக்களில் பலரும் நாட்டை விட்டு பத்திரமாக வெளியேறினர். அங்கிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவதற்கு முன்பாக பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்தநிலையில் அங்கு இருந்து 28 அமெரிக்கர்கள் உள்பட 35 பேர் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் தலைநகர் காபூலை விட்டு வெள்ளிக்கிழமையன்று வெளியேறினர். இதையொட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்றுமுன்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காபூலில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் அமெரிக்க குடிமக்கள் 28 பேர், நிரந்தர குடியிருப்பாளர்கள் 7 பேர் வெளியேறி உள்ளனர். இப்படி காபூலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் தொடர்ந்து உதவி வருகிற கத்தார் அதிகாரிகளுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புகிற அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்படுகிற ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்