ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி; குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை!

அவரது கணவர் மற்றும் மகன் உயிர்பிழைக்க போராடி வருகின்றனர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Update: 2022-05-08 08:35 GMT
ரசல் கைமா,

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் விடுமுறையில் சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ்-அல்-கைமாவில் ஈத் விடுமுறையின் போது நடந்த பயங்கர கார் விபத்தில், இந்திய செவிலியர் உயிரிழந்தார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராஸ்-அல்-கைமாவில் உள்ள அல் ஹம்ரா கிளினிக்கில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்தார்.

கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 36 வயதான டின்டு பால் என்ற செவிலியர் தனது கணவர் கிருபா சங்கர், மற்றும் குழந்தைகள் - கிருதின்(10), ஒன்றரை வயது ஆதின் சங்கர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் மே 3ம் தேதியன்று காரில், ஜெபல் ஜெய்ஸ் மலைக்குச் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அவர்களது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்பத்தினரை போலீசார் ரசல் கைமாவில் மருத்துவமனையில் சேர்த்தனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும், மறுநாள் செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் உயிர்பிழைக்க போராடி வருகின்றனர். அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அவருடைய குடும்பத்தினர் இந்த சோக செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் உள்ளனர். டின்டு பாலின் சகோதரர் அவருடைய  இறுதிச்சடங்கிற்காக அங்கு சென்றுள்ளார். 

கடந்த ஒரே வாரத்தில் நடந்துள்ள இந்திய செவிலியரின் இரண்டாவது மரணம் இதுவாகும். முன்னதாக, ஓமனின் சலாலாவில் ஈத் விடுமுறையின் போது மே 1ஆம் தேதி, அபுதாபியில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலம், சேப்பாட் பகுதியைச் சேர்ந்த ஷெபா மேரி தாமஸ், மற்றொரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை பயன்படுத்துவோர் அனைவரையும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சாலையை பயன்படுத்துவோர் அனைவரும் வேக வரம்புக்குள் வாகனங்களை ஓட்டவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கவும் ரசல் கைமா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்