சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே குண்டு வெடிப்பு - 6 பேர் பலி

சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-28 02:56 GMT

டமாஸ்கஸ்,

சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது. ஆனாலும், அந்நாட்டில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரில் இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலம் உள்ளது. ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்த வருகை தருகின்றனர்.

இந்த வழிபாட்டுத்தலம் அருகே நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என்று சிரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்