ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ் ராணுவம்

ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை பிலிப்பைன்ஸ் ராணுவம் சுட்டுக் கொன்றது. அவரது உதவியாளரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-06-14 20:14 GMT

கோப்புப்படம்

மணிலா,

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது சிரியா, ஈராக்கில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் செயல்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் அபு சயாப் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் அங்கு ஈடுபடுகின்றனர்.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு பிலிப்பைன்சில் உள்ள மராவி என்ற பகுதியை கைப்பற்றி தங்களது நாடாக அறிவிக்கும் நோக்கத்தில் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்டனர். இந்த மோதலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள இந்த பயங்கரவாதிகளை விரட்டியடிக்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முடிவு செய்தது.

இந்தநிலையில் தென்கிழக்கு ஆசியாவின் ஐ.எஸ்.பயங்கரவாத குழு தலைவரான பஹாருதின் பெனிட்டோ ஹட்ஜி சதார் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மராவி நகர முற்றுகைக்கு தலைமை தாங்கிய முக்கிய கிளர்ச்சியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து லானோ டெல் சுர் மாகாணத்தில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மராவி நகர் அருகே முகாமிட்டு இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் சதாரும், அவரது உதவியாளரும் கொல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்