இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.470: டீசல் விலையும் கடும் உயர்வு - 'டோக்கன்' முறை அமல்

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.470 ஆக உயர்ந்திருக்கிறது. டீசல் விலையும் லிட்டர் ரூ.460 என கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ‘டோக்கன்’ முறை அமல்படுத்தப்படுகிறது.;

Update:2022-06-27 05:23 IST

கோப்புப்படம்

கொழும்பு,

அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பான வன்முறைகளில் ஒரு எம்.பி. உள்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

ஆனால் மக்களின் சிரமம் சீக்கிரம் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. அது மேலும் மேலும் கூடிக்கொண்டேதான் செல்கிறது.

இந்நிலையில் இலங்கையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் ரூ.50 அதிகரித்து லிட்டர் ரூ.470 ஆகவும், டீசல் ரூ.60 அதிகரித்து லிட்டர் ரூ.460 ஆகவும் கிடுகிடுவென விலை உயர்ந்திருக்கின்றன. நேற்று பிற்பகல் 2 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது.

அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலிய நிறுவனமும், இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் இந்த விலை உயர்வை அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி தாமதத்தால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையில், பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக திங்கட்கிழமை (இன்று) முதல் 'டோக்கன்' முறை அமலுக்கு கொண்டுவரப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகரா நேற்று தெரிவித்துள்ளார்.

'வங்கி நடைமுறை மற்றும் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இந்த வாரமும், அடுத்த வாரமும் வரவேண்டிய பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அடுத்த வாரம் வரை பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்