நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்; அமெரிக்காவில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

நவீன இந்தியாவை கட்டமைத்த அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Update: 2023-06-05 07:29 GMT

நியூயார்க்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் முன் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர், நாட்டின் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய முக்கியம் வாய்ந்த அனைத்து தலைவர்களும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கூறி உள்ளார்.

அவர் பேசும்போது, நவீன இந்தியாவின் மைய வடிவமைப்பாளரான மகாத்மா காந்தி ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். இந்திய விடுதலை இயக்கத்திற்கான அடிக்கல் தென்ஆப்பிரிக்காவில் நாட்டப்பட்டது.

அம்பேத்கார், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்கள் புற உலகை பற்றிய திறந்த மனது கொண்டிருந்தனர் என கூறியுள்ளார்.

இந்தியாவின் மதிப்பை அந்நிய மண்ணில் அவமதிப்பு செய்து வருகிறார் என மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு கூறி வரும் சூழலில் அவரது இந்த பேச்சு அமைந்து உள்ளது.

தொடர்ந்து அவர், நாடு இரண்டு கருத்துகளை கொண்டவர்களுக்கு இடையேயான போரை இந்தியா சந்தித்து வருகிறது. ஒன்று காங்கிரஸ் கட்சி. மற்றொன்று பா.ஜ.க. மற்றும் அதன் கருத்துகளின் பெற்றோரான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என அவர் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தேச தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் கருத்துகளை கொண்டு உள்ளது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆனது, மகாத்மா காந்தியை படுகொலை செய்த வலதுசாரி தலைவரான, தனது சொந்த வாழ்வின் உண்மையை எதிர்கொள்ள முடியாத நாதுராம் கோட்சேவின் கருத்துகளை கொண்டது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்