தைவான் சென்றார் அமெரிக்க சபாநாயகர் நான்சி: அடுத்து நடக்கப்போவது என்ன? உலக அரங்கில் பரபரப்பு

அமெரிக்க சபாநாயகர் நான்சி. சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு தைவான் சென்றடைந்தார். அடுத்தது என்ன? என்ற பரபரப்பு உலக அரங்கில் தொற்றிக்கொண்டுள்ளது.

Update: 2022-08-03 00:23 GMT

Image Courtacy: AFP

தைபே,

2-ம் உலக போருக்கு பிறகு சீனாவில் இருந்து தைவான் பிரிந்தது.

தற்போது தைவான் நாடு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது.

ஆனால் சீனாவோ, தைவானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, தைவானை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் சீன அதிபர் ஜின்பிங் தீராத ஆசை கொண்டுள்ளார். இதற்கு காரணம், உலக அரங்கில் அமெரிக்கா தன்னை முன்னணியில் நிறுத்திக்கொண்டதுபோல ஆசியாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா கருதுவதுதான்.

தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு

தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா கூறி வருகிறது.

ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். இது சீனாவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

நான்சி பயணம்

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82), தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானை சேர்த்துக்கொண்டார். அவர் தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்தன.

உடனே சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது. நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையைக் கொடுக்கும் என்று சீனா எச்சரித்தது. இதுபற்றி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் குவா சுன்யிங் கூறும்போது, "சீனாவின் இறையாண்மை பாதுகாப்பு நலன்களை பலவீனப்படுத்தினால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தைவானில் நான்சி

ஆனால் சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளும் வகையில் நான்சி பெலோசியின் தைவான் பயணம் உறுதியானது. இதனால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு உருவானது. அமெரிக்காவின் 13 போர் விமானங்கள், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைத்தளங்களில் இருந்து புறப்பட்டன. இந்த விமானங்கள், நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின்போது, அவரது விமானத்துக்கு பாதுகாப்பாக அணிவகுத்து செல்லும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நான்சி பெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்த நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து அவரது விமானம் (சி-40பி) தைவான் புறப்பட்டது.

நான்சி பெலோசியின் விமானம் தைவான் வான்பரப்புக்குள் சென்றதும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தன.

மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன.

இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரம் நேற்று இரவு 8.12 மணி) தரை இறங்கியது.

இதனால் அடுத்தது என்ன என்ற பரபரப்பு உலக அரங்கில் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்