வளங்களை பெருக்கும் கலாநிதி யோகம்
செல்வாக்கு பெற்ற மனிதர்களின் தொடர்பு மற்றும் நட்பு காரணமாக ஏற்படும் ஆதாயங்கள் மற்றும் இதர நன்மைகளை அளிக்கும் கலாநிதி யோகம் பற்றி ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு தனி மனிதருக்கு சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள மனிதர்களின் நட்பு அல்லது தொடர்பு பற்றி ஒரு நபரின் ஜாதக ரீதியாக குறிப்பிட்டுக்காட்டுவது கலாநிதி யோகம் ஆகும். சுபக்கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து 2-ம் வீட்டிலோ அல்லது 5-ம் வீட்டிலோ இருப்பது அல்லது அந்த ராசிகளில் ஏதேனும் ஒன்றில் குரு அமர்ந்த நிலையில், அந்த வீட்டை புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பது ஆகிய நிலைகளில் கலாநிதி யோகம் ஏற்படுகிறது.
மிகவும் அரிதாக அமையக் கூடிய இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல குண நலன்களை கொண்டவர் களாக இருப்பார்கள். பிறக்கும்போது இவர்களின் குடும்பம் ஓரளவிற்கு பொருளாதார வசதி கொண்டதாக இருக்கும். இவர்கள் பிறந்த பின்னர் குடும்பத்திற்கு சிறப்பான பொருளாதார வளம் உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவர்கள் எளிதில் நோய்களால் பாதிக்காத பலம் வாய்ந்த உடலும், பிறரை வசீகரிக்கும் முகத்தோற்றமும், குரல் வளமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் திறன் பெற்ற இவர் தங்களது 24 வயது முதல் பொருளாதார உயர்வை அடைவார்கள். ஆடம்பரமான வீடு, வாகனங்கள் ஆகியவற்றை பெற்றிருப்பார்கள். அரசியல் துறையில் உள்ளவர்களால் ஆதாயங்களை பெறுவார்கள்.